Saturday, March 23, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அபய வார்த்தை

ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.
இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்
வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்
விட்டார்.

அபய வார்த்தை

அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,
பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.
“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.
எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி விட்டீர்கள். என்
உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது.
என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று
அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒரு
விதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான்,
“நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா?
எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்ய மாட்டோம்.
வந்த மனுசன் ஏதோ அசட்டுத் தனமாய்ச்சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்து விடுங்கள்”
என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான்
ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.

கண்டி அகப்பட்டது

எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது.
மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத்
தம்பிரான் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று
குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து
தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான்
எல்லா இடங்களையும் பெருக்கிக் கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாட
மொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது.
உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.

அதை வாங்கிக் கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி
அடைந்து, “நேற்று நான் அனுசுட்டானத்துக்குப் போகையில் அங்கே இதை
மாடத்தில் வைத்து விட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது
திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று
குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும்
மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன்.
சந்நிதானம் ஒரு முக்கியமான விசயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம்
அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு
உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல
தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான்
வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும்
தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும்
தெரிந்து விட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப்
பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை
அடைந்து விட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும்
அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான்
விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.

கோளால் வந்த துன்பம்

வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று
என்னைப்பற்றிக் கோள் கூறினார்
. அதனால் பிள்ளையவர்கள் என்பால் சினங் கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங் கொண்டால் அவரிடம்
பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு
இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும், ஆசிரியர்
ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்து
வந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக் கொள்ளும், எழுதும்”
என்று சொல்ல மாட்டார். படுத்துக் கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல்
அடியை ஆரம்பிப்பார். அது புதுப் பாடலாக இருந்தால் அதனை எழுத
வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும்
எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன்.
 அவர் சொல்லிக்
கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை
அறிந்து நான் நிறுத்தி விடுவேன்.

தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள்
நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு
யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.

அப்போது மாயூரத்தில் வசந்தோற்சவம் நடந்தது. அந்த உற்சவ
தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக் கூட்டத்துடனும்
பரிவாரங்களுடனும் சென்றார். 
ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில
மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம்.
சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் சிரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த்
தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு
காரியத்தரோடு அனுப்பி ஆகாரம் செய்து வரும்படி சொன்னார். இவ்விசயம்
பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.

நான் போசனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து
திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே
ஆகாரம் செய்து கொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மடத்தில் பந்தி நடைபெறும் பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே
போய் உணவு கொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய
வெள்ளை வேட்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள்.
வெள்ளை வேட்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு
உரியது
.

வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும்
இருப்பதைப் போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர்
முகத்தில் தோற்றியது. போசனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர்
திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை
நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும்
பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை
இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமி நாதையர் என்னுடன்
வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்து
விட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக
எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு
காரியாத்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர்
போசனம் செய்து வந்திருப்பார்” என்றார்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’

ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம்
அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போசனம் செய்பவர் போலப்
பாவனை செய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச்
சுத்தி செய்து கொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு
நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த
நான் எழுந்து நின்றேன்.

நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில்
வந்து முகத்தை உற்று நோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம் செய்தாயிற்றா?”
என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம்
சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு
தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.

பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர்
அவ்வளவு வேகமாக வந்ததும், என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும், சில
தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு
நிகழ்ச்சிகளைப் போல இருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக்
கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்து
கொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்
” என்று கூறி அங்கே
நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டி வந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப் போல என் ஆசிரியர் விளங்கினார்.

அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட
அன்பு என்றாவது ஒரு நாள் மிக வேகமாக வெளிப்படத் தான் வேண்டும்
அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.


Saturday, March 16, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 : அன்பு மூர்த்திகள் மூவர்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்- 48

சில சங்கடங்கள்

ஒரே மாதிரியான சந்தோசத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பது
இவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலே
இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலே
செழித்திருப்பவர்களாயினும், வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம்
துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல்
இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும்
அபாக்கியர்களும் இல்லை.

எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க் கல்வி இலாபமும்
திருவாவடுதுறையிலே கிடைத்தன
. மனத்திலே சந்தோசம் இடையறாது
உண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றி
இருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோசத்திற்குத் தடை நேராமல்
இல்லை.

ஒவ்வாத உணவு

இரண்டு வகையாக நடந்து வந்த பாட வகுப்பில் நானே படித்து
வந்தமையால் சில நாள் என் தொண்டையும் நாக்கும் புண்ணாகிவிடும். ஆகாரம் செய்துவந்த சத்திரத்தில் எல்லோரையும் போல் நானும் ஒருவனாக இருந்து ஆகாரம் பண்ணிவந்தேன் என் அசௌகரியத்தை அறிந்து கவனித்து அதற்கேற்ற உணவுகளை அளிப்பவர் யாரும் அங்கே இல்லை. எனக்கு இன்ன வகையான உணவு செய்துபோட
வேண்டுமென்று துணிந்து சொல்லுவதற்கும் நான் அஞ்சினேன். சத்திரத்தில்
அப்போது உணவு அளித்து வந்தவள் ஒரு கிழவி. மடத்திலிருந்து வரும்
உணவுப் பொருள்களுக்குக் குறைவு இல்லை. உணவருந்த வருபவர்களுக்கு
அவற்றைக் கொண்டு நல்ல உணவு சமைத்து வழங்குவதற்குரிய சக்தி அந்த
அம்மாளுக்கு இல்லை. எல்லாம் சரியாகவே நடந்து வருமென்பது
மேலேயுள்ளவர்களது கருத்து. “இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி
இருக்கிறார்களே!” என்று நான் வருந்தினேன்.

சத்திரத்து உணவு என் தேகத்துக்கு ஒவ்வாமையால் சில நாட்கள் நான்
அன்னத்தோடு மோரை மட்டும் சேர்த்துக் சாப்பிட்டதுண்டு.
அயலூர்களிலிருந்து திருவாவடுதுறைக்கு வரும் வித்துவான்களிலும்
கனவான்களிலும் சிலர் சில சமயங்களில் சமையற்காரர்களை அழைத்து
வருவார்கள்; சில சமயங்களில் குடும்பத்துடன் வருவதுமுண்டு. நான் பண்டார
சந்நிதிகளுக்கு வேண்டியவனென்று தெரிந்தவர்களாதலால் என் நிலைமையை
அறிந்து தங்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி அவர்கள் என்னை
வற்புறுத்துவார்கள். அப்போது எனக்கு மெத்த ஆறுதல் ஏற்படும்.

குழம்பு செய்த குழப்பம்

ஒரு நாள் எனக்கு வயிற்றுப் போக்கு உண்டாயிற்று. மாங்கொட்டைக்
குழம்பு வைத்துச் சாப்பிட்டால் அந்நோய் நீங்குமென்று
 எனக்குத்
தெரியுமாதலால் அக்கிழவியிடம் நயமாகப் பேசி அதைச் செய்து போடும்படி
கேட்டுக் கொண்டேன். அந்த அம்மாள் அப்படியே செய்து போட்டாள். நான்
ஆகாரம் செய்ய உட்கார்ந்த பின் என் இலையில் அந்தக் குழம்பைப்
பரிமாறினாள். என்னுடன் உணவருந்தியவர்களுள் ஒருவர் இதைக் கவனித்தார்,
திருவாலங்காட்டுக்குச் சென்று சம்சுகிருதம் படித்து வருபவர் அவர்.
அவருக்கு மனம் பொறுக்கவில்லை. “எல்லாரும் சாப்பிடுகிற
இப்பொதுவிடத்தில் இவருக்கு மட்டும் தனியாக எதையோ செய்து
போடுகிறாளே!” என்று அவர் எண்ணினார். அந்நினைவு வளர்ந்தது. ஒரு
பெரிய தவறு சத்திரத்தில் நேர்ந்ததென்று தோற்றும்படி அச்செய்தியை மிகவும்
சாதுரியமாக விரித்து அவர் சுப்பிரமணிய தேசிகர் காதில் விழும்படி செய்து
விட்டார்
. உடனே கிழவிக்கு மடத்திலிருந்து உத்தரவு வந்தது; “பலர்
சாப்பிடுகையில்ஒருவருக்கு மட்டும் தனியே உபசாரம் செய்வது தப்பு; இனிமேல்
இம்மாதிரியான காரியம் செய்யக்கூடாதென்று உத்தரவாகிறது” என்று
காரியத்தர் வந்து கிழவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.

இந்நிகழ்ச்சி எனக்கு மிக்க மனத் துன்பத்தை உண்டாக்கியது, “பண்டார
சந்நிதிகள் நம்மிடமே நேரில் விசயத்தை விசாரித்துத் தெரிந்து
கொண்டிருக்கலாமே! யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு இப்படிச்
செய்தார்களே” என்று வருந்தினேன். “ஒரு நாளும் அவர்கள் அப்படிச்
செய்யமாட்டார்கள். யாரோ ஒருவர் போய் எனக்கு விசேட உபசாரம்
நடந்ததாகச் சொல்லியிருக்கக் கூடும். பொதுவிடத்தில் பட்சஷபாதம் இருப்பது
சரியன்று என்று எண்ணி இப்படி உத்தரவு அனுப்பியிருக்கலாம்
. நமக்கு நடந்த
உபசாரம் மாங்கொட்டைக் குழம்புதான். அதுவும் தேக அசௌக்கியத்துக்காக
ஏற்பட்டதென்று தெரிந்திருந்தால் நம்மிடம் விசேட அன்பு வைத்திருக்கும்
அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்” என்று நானே சமாதானம்
செய்து கொண்டேன்.

இரவில் பொழுது போக்கு

இரவில் ஆகாரம் செய்த பிறகு மடத்திற்கு வந்து அங்குள்ள
குமாரசாமித் தம்பிரானுடன் பாடத்தைப் படித்துச் சிந்தித்து வருவேன். பிறகு
அங்கேயே படுத்துக் கொள்வேன். இவ்வழக்கம் திருவாவடுதுறை சென்ற பிறகு
சில மாதங்கள் வரையில் இருந்தது. மடத்தில் தங்கி வந்த காலத்தில் ஒரு நாள்
இரவு அவருடன் வழக்கம்போலவே படித்துவந்தேன். மடத்தின் கீழ்ப்பக்கத்தில்
இருந்த சவுகண்டியில் தம்பிரான்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு அறைகள்
உண்டு. குமாரசாமித் தம்பிரான் ஓர் அறையில் இருந்து வந்தார். அதற்கு
எதிரே உள்ள அறையில் பன்னிருகைத் தம்பிரான் என்பவர் இருந்தார். அவர்
நல்ல செல்வாக்குடையவர். ஆதீனத்தில் பொறுப்புள்ள உத்தியோகங்களை
வகித்தவர். அறைகளுக்கு மத்தியிலுள்ள கூடத்தில் நாங்கள் இருந்து படித்த
நூல்களைச் சிந்தனை செய்வோம். அப்போது அவரும் உடனிருந்து
கவனிப்பார். படித்துக் கொண்டிருந்த நான் அலுப்பு மிகுதியால் அங்கே
படுத்துத் தூங்கி விட்டேன். இரவு மணி பத்து இருக்கும். குமாரசாமித்
தம்பிரானும் பன்னிருகைத் தம்பிரானும் பேசிக்கொண்டிருந்தனர். முத்துசாமி
ஓதுவார் அங்கே வந்தார்.

எதிர்பாராத சம்பவம்

மடத்திலும் கோயிலிலும் அர்த்த சாமத்தில் நிவேதனமாகும்
பிரசாதங்களில் ஒரு பகுதி சுப்பிரமணிய தேசிகருக்கு வரும். அவற்றில் சிறிது, தாம் உபயோகித்துக் கொண்டு பாக்கியைத் தனித்தனியே பிரித்துக்
தம்பிரான்களுக்கும் அனுப்புவார். ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு வடை,
சுகியன், தேங்குழல் முதலிய பிரசாதங்கள் தம்பிரான்களுக்குக் கிடைக்கும்.
குமாரசாமித் தம்பிரானுக்கும் பன்னிருகைத் தம்பிரானுக்கும் கொடுப்பதற்காக
அப்போது முத்துசாமி ஓதுவார் அவற்றை எடுத்து வந்தார். அவர் வந்த சமயம்
தம்பிரான்கள் இருவரும் அன்று மாலையில் நடந்த ஒரு களவைப் பற்றிச்
சம்பாசித்திருந்தனர்.

பன்னிருகைத் தம்பிரான் ஒரு சிறந்த ஏறுமுகருத்திராட்ச கண்டியை
அணிந்திருந்தார். அதன் இரு தலைப்பிலும் கல்லிழைத்த தங்க முகப்புகள்
உண்டு ஏறக்குறைய இரண்டாயிர உரூபாய் பெறுமானமுள்ளது. அன்று மாலை
தம்பிரான் குளப்புரைக்குப் போய் வந்து சில வேலைகளைக் கவனித்தார். சிறிது
நேரமான பிறகு பார்த்த போது கண்டி காணப்படவில்லை. விலையுயர்ந்த
பொருளாதலால் மடத்துக் காரியத்தர்கள் அதைத் தேடலாயினர்.

“தவசிப் பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லவேண்டும். இந்த மடத்தில்
இந்த மாதிரி நடப்பதென்றால் ஆதீனத்துக்கே குறைவல்லவா?” என்றார்
பன்னிருகைத் தம்பிரான்.

“ஒவ்வொரு பயலாகக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். திருடினவன்
இலேசில் சொல்ல மாட்டான். கட்டிவைத்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார்
குமாரசாமித் தம்பிரான்.

அங்கே இருந்த முத்துசாமி ஓதுவார் அவர்களுடைய பேச்சு இன்ன
விசயத்தைப் பற்றியதென்பதை அறிந்து, ‘இது தெரிந்து சந்நிதானம் கூட
மிகவும் கவலையோடிருக்கிறது. இவ்வளவு துணிவான காரியத்தைச் செய்தவன்
யாரா யிருப்பான்? அங்கங்கே எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்”
என்று சொல்லி அச்சம்பாசணையில் கலந்தனர்.

அவர்கள் மூவரும் பேசிய சத்தத்தால் என் தூக்கம் கலைந்தது. நன்றாகத்
தூங்கின எனக்குச் சிறிது விழிப்பு உண்டாயிற்று. கண்ணைத் திறவாமல்
மறுபடியும் தூக்கத்தை எதிர்பார்த்துப் படுத்த வண்ணமே இருந்தேன்.
அப்போது அங்கே வந்த வேறொரு மனிதர், “இங்கே வந்திருக்கும் புதிய
மனிதர்களையும் விசாரிக்கவேண்டும்” என்றார்.

“புதிய மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லாம் பழைய
பெருச்சாளிகளே. அவர்கள் வேலையாகத்தான் இருக்கும் இது” என்றார்
குமாரசாமித் தம்பிரான்“அப்படிச் சொல்லலாமா? இந்த ஐயர் புதியவர் அல்லவா? இவர்
எடுத்திருக்க மாட்டாரா?” என்று அந்த மனிதர் சொன்னார்.

அந்த வார்த்தை என் காதில் விழுந்ததோ இல்லையோ எனக்கு
நடுக்கமெடுத்தது. அரை குறையாக இருந்த தூக்க மயக்கம் எங்கேயோ பறந்து
போயிற்று.

“ஐயோ! ஒரு பாவமும் அறியாத நம்மைச் சந்தேகிக்கிறார்களே!
திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்ளவா இவர்களுடன் பழகுகிறோம்! எதற்காக
நாம் இங்கே வந்தோம்!” என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

“என்ன சொன்னாய்? அடபாவி! அந்த வார்த்தையை மறுபடி சொல்ல
வேண்டாம்” என்று பன்னிருகைத் தம்பிரான் அம்மனிதரை நோக்கிச்
சொன்னார்.

குமாரசாமித் தம்பிரானோ மிக்க கோபக் குறிப்புடன், “உம்மை யாரையா
கேட்டார்? மனிதர்களுடைய தராதரம் இலவலேசமும் தெரியாத நீர்
அபிப்பிராயம் சொல்ல வந்து விட்டீரே! வந்த வழியைப் பார்த்துக்கொண்டு
போம். இனி இங்கே நிற்க வேண்டா” என்று கடுமையாகக் கூறினார்.

(தொடரும்)


என் சரித்திரம், உ.வே.சா.


Saturday, March 09, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 – அன்பு மூர்த்திகள் மூவர்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46.2 – தொடர்ச்சி

என் சரித்திரம்

அத்தியாயம்-47

அன்பு மூர்த்திகள் மூவர்

திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும்
மாலையிலும் முறையாக நடந்து வந்தன சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு
என்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது
 பிள்ளையவர்களுக்கு
என்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவு
காட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும்
நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்த
ஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகத்தர்கள் என்னிடம்
பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனே
கொடுத்து உதவித் தங்கள் அன்பைப் பலப்படுத்தினர். எல்லாருடைய
அன்பும் நிலைத்திருக்க வேண்டுமென்ற கவலையால் யாரிடமும் நான் மிகவும்
பணிவாகவும் சாக்கிரதையாகவும் நடப்பதை ஒருவிரதமாக மேற்கொண்டேன்.

‘சந்நிதானத்தின் உத்தரவு’

மாசி மாதம் மகா சிவராத்திரி வந்தது. திருவாவடுதுறையில்
உள்ளவர்களுக்கு ஏதேனும் சாமான்கள் வேண்டுமானால் மடத்து
உக்கிராணத்திலிருந்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். அக்காலத்தில்
அவ்வூரில் கடைகள் இல்லை. சிவராத்திரியாதலால் மாலையில் கோமுத்தீசுவரர்
ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய எண்ணினேன். தேங்காய்,
பழம், பாக்கு, வெற்றிலை முதலியவை வேண்டும். கடைகளோ இல்லை.
ஆதலால் ‘மடத்து உக்கிராணத்திலே வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்துக்
காலைப் பாடம் முடிந்தவுடன் அவ்விடத்தையடைந்து வெளியில் நின்றபடியே
உக்கிரணக்காரரிடம் எனக்கு வேண்டியவற்றைச் சொன்னேன். “ஐயரவர்கள்
எப்போது எது கேட்டாலும் கொடுக்க வேண்டுமென்று சந்நிதானத்தில்
உத்தரவு” என்று கணீரென்று ஒரு சப்தம் கேட்டது. அசரீரி வாக்கைப்போன்ற
அவ்வொலி எங்கிருந்த வந்ததென்று கவனித்தேன். கந்தசாமி ஓதுவாரென்பவர்
அவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே அயலிலிருந்த ஒரு
சன்னலுக்கு அப்புறத்தில் பண்டார சந்நிதிகள் அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
உடனே எனக்குச் சிறிது நாணம் உண்டாயிற்று. “எது வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்ளலாமென்று உத்தரவாகிறது” என்று அருகில் வந்த ஓதுவார்
மீட்டும் சொன்னார். அதனை உறுதிப்படுத்துவது போலத் தேசிகர் புன்னகை பூத்தார். வேண்டிய பொருள்களையெல்லாம் தடையின்றி நான் பெற்றுக் கொண்டேன். இயல்பாகவே வேண்டும்போது எனக்கு உதவி வரும் அந்த உக்கிராணக்காரர் அன்று முதல் என் குறிப்பறிந்து எனக்கு வேண்டுவனவற்றை அப்பொழுதப்பொழுது உதவி
வந்தார். பிற்காலத்திலும் எனக்கு வேண்டிய பொருள்களை வேண்டிய
சமயங்களில் அந்த உக்கிராணம் கொடுப்பதும் நான் பெற்றுக் கொள்வதும்
வழக்கமாயின.

காலைப் பாடத்தில் திருவானைக்காப் புராணம் முற்றுப் பெற்றது.
அதன்பின் திருநாகைக்காரோணப் புராணம் ஆரம்பமாயிற்று. முன்னரே
அந்நூலை நான் பட்டீச்சுரத்திலே பாடங் கேட்டிருந்தமையால் மடத்திற்
படிக்கும்போது மிக்க தெளிவோடு படித்தேன். அவ்வப்போது இன்ன இன்ன
இராகத்தில் படிக்க வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் கூறுவார். அங்ஙனமே
நான் படிப்பேன்.

ஓதுவாரது அன்பு

ஒரு நாள் காலையில் மடத்திலிருந்து வெளியே வந்து ஆகாரம்
செய்யும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது மணி
பதினொன்றுக்கு மேல் இருக்கும். என்க்கெதிரே மடைப்பள்ளி
விசாரணைக்காரராகிய முத்துசாமி ஓதுவாரென்பவர் வந்தார்
. அவருடைய
அன்பும் மரியாதையும் எப்போது கண்டாலும் அவரோடு சில வார்த்தைகள்
பேச வேண்டுமென்று என்னைத் தூண்டும். ஆதலால் அவரைப் பார்த்தவுடன்.
கிழக்கேயிருந்து வருகிறீர்களே; அக்கிரகாரத்தில் ஏதேனும் வேலை
இருந்ததோ!” என்று கேட்டேன்.

“ஐயாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“உங்கள் வீடு வடக்கு வீதியில் அல்லவா இருக்கிறது? இங்கே உங்கள்
தாயார் தகப்பனார் வரக் காரணம் என்ன?”

“இல்லை. அண்ணாவுடைய ஐயா அம்மா வந்திருக்கிறார்கள்” என்று
அவர் சொன்னவுடனே, “என்ன! எங்கே வந்தார்கள்?” என்று பரபரப்போடு
அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற என் ஆவலைப் புலப்படுத்தினேன்.

ஓதுவார் பிராயத்தில் என்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும் என்னை
அண்ணாவென்றே அழைத்து வந்தார். என் பெற்றோர்கள் அன்றைத்தினம்
வருவதாக எனக்கு முன்னமே தெரிவிக்கவில்லை. அவர்களை நான் எதிர்ப்பார்க்கவுமில்லை. “அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்களோ? பழக்கமில்லாத இடமாயிற்றே! சாப்பிடும் நேரமாயிற்றே! அப்பா பூசை பண்ணவேண்டுமே!” என்றெல்லாம் நான் விரிவாக யோசனை செய்தேன். என் உள்ளத்து உணர்ச்சிகளை முகக் குறிப்பால் ஒருவாறு ஊகித்து உணர்ந்த ஓதுவார், “கவலைப்படவேண்டா. அவர்கள் காலையிலே வந்து விட்டார்கள். அவர்கள் வந்து அண்ணாவைப் பற்றி விசாரித்தபோதே இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவர்களுக்குச் சத்திரத்தில் தக்க இடம் கொடுத்து வேண்டிய சாமான்களை அனுப்பினேன். ஐயாவின் பூசைக்கு
வேண்டிய பால் முதலிய திரவியங்களையும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள்
அங்கே குளியலையும் பூசையையும் முடித்துக் கொண்டு அண்ணாவின்
வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். போய் ஆகாரம் செய்ய வேண்டியதுதான்.
இப்போது அங்கே போய் விசாரித்து விட்டுத்தான் வருகிறேன்” என்றார்.

எனக்குத் தெரியாமலே நிகழ்ந்த அச்செயல்களைக் கேட்டு நான்
ஆச்சரியமடைந்தேன். ஓதுவாருடைய அன்பையும் விதரணையையும் மடத்தில்
உள்ள ஒழுங்கையும் பாராட்டியபடியே நான் விரைவாக என் தாய் தந்தையர்
உள்ள இடத்துக்குச் சென்றேன்.

பெற்றோர் மகிழ்ச்சி

நான் அங்கே போனவுடன், “எப்படிப்பட்ட மனுசர்கள்! என்ன
ஏற்பாடுகள்! என்ன விசாரணை!” என்று என் தந்தையார் தம் சந்தோசத்தை
வெளிப் படுத்தினார். “சாமா, இம்மாதிரியான இடத்தை நான்
பார்த்ததேயில்லை. நாங்கள் உன்னைப் பார்த்து விட்டுப் போகலாமென்று
இன்று காலையில் இங்கு வந்தோம். சிலர் சத்திரத்தில் தங்கலாமென்று
சொன்னார்கள். அப்போது இவ்விடம் வந்தோம். இங்கே ஒருவர்
எதிர்ப்பட்டார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். உன்னைப் பார்க்க
வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே எங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம்
விசாரித்து விசாரித்துக் கொடுத்து உதவினார். “இந்த மாதிரியான
மனுசர்களை நான் இதுவரை பார்த்ததில்லை அவர் யார்?” என்று என்
தாயாரும் கேட்டார்.

“அவர் எனக்கு ஒரு தம்பி” என்று மனத்துக்குள்ளே சொல்லிக்
கொண்டேன். ஓதுவாருடைய அன்பை என் மனம் நன்றாக அறியும்.
அவர்களுக்கு அவ்வளவு தெரியாதல்லவா?

“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குழந்தையாக
இருந்த என் தம்பியை என்னிடம் அன்னையார் அளித்தார். நான்
சந்தோசமாக வாங்கி அணைத்துக் கொண்டேன்.என் அன்னையார் சமைத்துத் தந்தையார் பூசையில் நிவேதனம் செய்யப் பெற்ற உணவை நான் உண்டு பல நாளாயின. அன்று அவ்வுணவை உண்டு மகிழ்ந்தேன். நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்ற திருப்தியால் அவர்களும் மகிழ்ந்தார்கள்.

இராக மாலிகை

அன்றைத் தினம் ஏதோ ஒரு காரணத்தால் காலையில் நடக்க வேண்டிய
பாடம் பிற்பகல் மூன்று மணி முதல் ஏழு மணி வரையில் மடத்திலுள்ள
பன்னீர்க்கட்டில் நடந்தது. சில நாட்களில் அவ்வாறு நடப்பதுண்டு. பாடம்
நடக்கையில் சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து அமர்ந்திருந்தார்.
குமாரசாமித் தம்பிரானும் நானும் பாடங்கேட்டு வந்தோம். பிள்ளையவர்கள்
சொன்னபடி நான் திருநாகைக்காரோணப் புராணத்தைப் படித்தேன். என்
பெற்றோர்களைக் கண்ட சந்தோசமும் என் அன்னையார் இட்ட உணவை
உண்ட உரமும் சேர்ந்து எனக்கு ஒரு புதிய ஊக்கத்தை உண்டாக்கின.
அதனால் அன்று நான் படித்தபோது ஒவ்வொரு செய்யுளையும் ஒவ்வொரு
இராகத்தில் மாற்றி மாற்றி வாசித்தேன்
சங்கீதப் பிரியராகிய தேசிகர்
இராகங்களைக் கவனித்து வந்தார். இடையிலே பிள்ளையவர்களைப் பார்த்து,
“உங்கள் சிசுயயர் இராகமாலிகையில் படிப்பது திருப்திகரமாக இருக்கிறது”
என்றார்.

இவ்வாறு பாடம் நடக்கையில் வடக்குப் புறத்தேயுள்ள ஓரிடத்தில் சிறிது
தூரத்தே சிலர் மறைவாக இருந்து கவனிப்பது வழக்கம். அன்றும் அப்படியே
சிலர் இருந்தனர். என் தந்தையார் மாலை அனுசுட்டானங்களை
முடித்துக்கொண்டு அப்பக்கமாக வந்தவர் பாடம் நடப்பதையும் சிலர்
தூரத்திலே இருந்து கவனிப்பதையும் கண்டு தாமும் அவர்களோடு ஒருவராக
அங்கே இருந்து நான் படிப்பதையும் பிள்ளையவர்கள் பொருள் சொல்வதையும்
கேட்டு வந்தார். அவர் வந்துகேட்டது எனக்குத் தெரியாது.

நான் இராகத்தோடு வாசிப்பதைக் கேட்டு அவரும் மகிழ்வுற்றார். நான்
படிப்பதைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பாராட்டிப் பேசிய வார்த்தைகள்
அவர் காதில் விழுந்தன. அப்போது அவருக்கு உண்டான சந்தோசத்துக்கும்
திருப்திக்கும் அளவு கூற முடியுமோ! இந்நிகழ்ச்சி முன்னேற்பாட்டோடு
நடந்ததுபோல் இருந்தது. தற்செயலாக என் தந்தையார் அங்கே வந்ததும், நான்
இராக மாலிகையில் படித்ததும், தேசிகர் பாராட்டித் தம் அன்பை
வெளிப்படுத்தியதும் என் தந்தையார் மனத்தில் இருந்த கவலையைப் போக்கவும் ‘இவனுக்கு ஒரு குறைவும் இல்லை’ என்ற தைரியத்தை
உண்டாக்கவும் காரணமாயின. பாடம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து
வந்தோம்.

நான் முன்னே வந்தேன். ஆசிரியர் பின்னே சிறிது தூரத்தில்
தம்பிரான்களோடு வரலாயினர். நான் வரும் வழியில் தந்தையாரைக்
கண்டபோது, “அப்பா! நீ படித்ததைக் கேட்டேன். பண்டார சந்நிதிகள்
சொன்ன வார்த்தைகளையும் கவனித்தேன். எல்லாம் ஈசுவரானுக்கிரகந்தான்”
என்று சொன்னபோது உள்ளே இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது. மேலே
பேசத் தெரியவில்லை. அவர் சாகைக்குச் சென்றார். பின் வருவதாகச் சொல்லி
நான் மீண்டும் ஆசிரியரோடு சேர்ந்து கொண்டேன்.

இரு முதுகுரவரும் ஆசிரியரும்

ஒவ்வொரு நாளும் மாலையில் ஆசிரியரோடு திருவாவடுதுறையிலுள்ள
கோட்டுமாங்குளம் வரைக்கும் சென்று அனுசுட்டானங்களை முடித்துவிட்டு
வருவது என் வழக்கம். இருட்டு வேளைகளில் ஆசிரியர் கையைப் பிடித்து
அழைத்து வருவேன். அன்றைத் தினமும் அவ்வாறு சென்று திரும்பும்போது,
“உம்முடைய தாயார் தகப்பனார் வந்திருப்பதாகச் சொன்னீரே; அவர்கள்
எங்கே தங்கியிருக்கிறார்கள்? இப்போது பார்த்து விட்டுப் போகிறேன்”
என்றார்.

“சிரமம் வேண்டாம். அவர்களே ஐயாவைப் பார்க்க வருவார்கள்”
என்று நான் சொல்லியும் அவர் வற்புறுத்தவே, அவரை என் பெற்றோர்களிடம்
அழைத்துச் சென்றேன்.

சத்திரத்தில் ஒரு விசிப் பலகையில் ஆசிரியர் அமர்ந்தார். தந்தையாரும்
அமர்ந்தார். தந்தையாரிடம் ஆசிரியர் யோக சேமங்களை விசாரித்துக்
கொண்டு இருந்த போது என் தாயார் வந்தார். அதற்கு முன் ஆசிரியரை
அவர் பார்த்ததே இல்லை.

“குழந்தையை நீங்களே தாயார் தகப்பனாரைப்போலக் காப்பாற்றி
வருகிறீர்கள். நாங்கள் எந்த விதத்திலும் இவனுக்குப் பிரயோசனப் படாமல்
இருக்கிறோம். உங்களுடைய ஆதரவினால்தான் இவன் முன்னுக்கு
வரவேண்டும்” என்று கண்ணில் நீர் ததும்ப அவர் சொன்னார். ஒரு
தெய்வத்தினிடத்தில் வரம் கேட்பது போல இருந்தது அந்தத் தொனி.

“நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குமாரர் நல்ல
புத்திசாலி, நன்றாகப் படித்து வருகிறார். கடவுள்கிருபையால் நல்ல நிலைமைக்கு வருவார்” என்று ஆசிரியர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் உள்ளத்தைக் குளிர்வித்தன. என்னிடம் அன்பு வைப்பவர்களுக்குள்ளே அந்த மூன்று பேர்களுக்கு இணையானவர்கள் வேறு இல்லை. அம் மூவரும் ஒருங்கே இருந்து என் நன்மையைக் குறித்துப் பேசும்போது அவர்களுடைய அன்பு வெளிப்பட்டது. அந்த மூவருடைய
அன்பிலும் மூன்று விதமான இயல்புகள் இருந்தன
. அவற்றினிடையே உயர்வு
தாழ்வு உண்டென்று சொல்ல முடியுமா? இன்ன வகையில் இன்னது சிறந்தது
என்று தான் வரையறுக்க முடியுமா? ஒரே அன்பு மயமாகத் தோற்றிய
அக்காட்சியை இப்போது நினைத்தாலும் என் உள்ளத்துள் இன்பம் ஊறுகின்றது.
அம்மூவரையும் மூன்று அன்பு மூர்த்திகளாக இன்றும் பாராட்டி வருகிறேன்.

மறு நாள் விடியற் காலையில் என் பெற்றோர்கள், “உன்னைப் பார்த்து
விட்டுப் போகத்தான் வந்தோம். பார்த்ததில் மிகவும் திருப்தியாயிற்று.
ஊருக்குப் போய் வருகிறோம். உடம்பைச் சாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”
என்று என்னிடம் சொல்லிவிட்டுச் சூரிய மூலைக்கு என் தம்பியுடன்
போனார்கள்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, March 02, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46 – தொடர்ச்சி

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம்-46 – தொடர்ச்சி

“என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்த போது

சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக்

காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங்

கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும்

நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை

ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று

சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விசயங்களைப் பேசினார்.

எனது வாட்டம்

தம்பிரான்களைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய

பாடங்களைப் பற்றியும் பேச்சு நடந்த பொழுது எனக்கு ஒருவகையான மன

வருத்தம் உண்டாயிற்று. “என்னை இவர்கள் மறந்து விட்டார்களே. நான்

தம்பிரான்களோடு சேர்ந்து பாடங் கேட்கக் கூடாதோ! ஆதீன

சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ! பிள்ளையவர்கள் சாகையிலே

இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா?

இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு இலாபம் ஒன்றுமில்லையே!”

என்று எண்ணி எண்ணி என் மனம் மறுகியது. நான் முக வாட்டத்தோடு

யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.

என் ஆவல்

அப்போது ஆசிரியர் என்னைப் பார்த்தார். என் மனத்துள் நிகழ்ந்த

எண்ணங்களை அவர் உணர்ந்து கொண்டாரென்றே தோற்றியது. அப்படி அவர்

பார்த்தபோது சிறந்த மதியூகியாகிய சுப்பிரமணிய தேசிகர் எங்கள் இருவர்

கருத்தையும் உணர்ந்தவர் போல, “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?”

என்று கேட்டார். அக் கேள்வி எனக்கு ஒருவகை எழுச்சியை உண்டாக்கிற்று.

யோசனையினின்றும் திடீரென்று விழித்துக் கொண்டேன். எனக்கிருந்த ஆவல்

தூண்டவே பிள்ளையவர்கள் விடை பகர்வதற்கு முன் நான் “இரண்டு

வகையிலும் சேர்ந்து பாடங் கேட்கிறேன்” என்று சொன்னேன்.யாவரும் தடை சொல்லவில்லை. என் ஆசிரியரும் தேசிகரும் தம்

புன்முறுவால் என் ஆவலாகிய பயிருக்கு நீர் வார்த்தனர்.

“எல்லோருக்கும் இலாபம் ஒரு பங்கு. உமக்கு இரட்டிப்பு இலாபம்” என்று

தேசிகர் கூறியபோது நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஆழ்ந்திருந்த துயரக்கடல்

மறைந்த இடம் தெரியவில்லை. சந்தோச உச்சியில் நின்றேன்.

“உம்மிடம் புத்தகங்கள் இருக்கின்றனவா!” என்று அந்த வள்ளல்

கேட்டார்.

அவருக்கு முன் இல்லையென்று சொல்வதற்கு நாணம் உண்டாக,

இல்லையென்றால் உண்டென்று தரும் பேருபகாரியாகிய தேசிகர் நான் அந்த

வார்த்தையைச் சொன்னவுடன் மடத்துப் புத்தகசாலையிலிருந்து

திருவானைக்காப் புராணத்தையும் சீகாளத்திப் புராணத்தையும் கொண்டு

வரச்செய்து எனக்கு வழங்கினார். “பாடம் நடக்கும்போது சாமிநாதையரே படிக்கட்டும்” என்று தேசிகர் உத்தரவிட்டார். நான் இசையுடன் படிப்பேனென்பது முன்பே தெரியுமல்லவா?

பாட ஆரம்பம்

குமாரசாமித் தம்பிரானுக்கு உரிய திருவானைக்காப் புராணம் முதலில்

ஆரம்பமாயிற்று. அப்புராணத்திலுள்ள விநாயகர் காப்புச் செய்யுளைப்

படித்தேன். ஆசிரியர் பொருள் சொன்னார். பின்பு மற்ற வகையாருக்கு உரிய

சீகாளத்திப் புராணத்தின் காப்புச் செய்யுளையும் படித்தேன். ஆசிரியர் உரை

கூறினார்.

இவ்வாறு அந்த நல்ல நாளிலே தம்பிரான்களுக்கு என் ஆசிரியர் பாடம்

சொல்லத் தொடங்கினார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி

காலையில் அவருக்கு முன்பு திருவானைக்காப்புராணம் நடைபெறும். பிற்பகலில்

மற்றவர்களுக்குரிய சீகாளத்திப்புராணம் மடத்தைச் சார்ந்த வேறு இடங்களில்

நிகழும். இரண்டு வகையிலும் நானே படித்து வந்தேன்.

பாடம் நடந்த முறை

சுப்பிரமணிய தேசிகர் முன் பாடம் நடக்கும்போது இடையிடையே நான்

இசையுடன் படிக்கும் முறையைத் தேசிகர் பாராட்டுவார். திருவானைக்காப்

புராணம் கடினமான நூலாதலால் ஒரு நாளைக்கு ஐம்பது பாடல்களுக்கு மேல்

நடைபெற வில்லை. சுப்பிரமணிய தேசிகரும் தமக்குத் தோன்றிய கருத்துகளை

உரியஇடங்களிற் சொல்லுவார். தேசிகரைத் தரிசிப்பதற்குக் காலையில்

அடிக்கடி பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அப்போதும் பாடம்

நடைபெறும். வந்தவர்களும் கேட்டு இன்புறுவார்கள். அத்தகைய

சந்தர்ப்பங்களில் பாடத்தின் சுவை அதிகமாகும். வந்திருப்பவர்களும் கேட்டுப்

பயனடையும்படி பிள்ளையவர்கள் பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுவார்.

சைவ சித்தாந்தக் கருத்துகள் வரும் இடங்களில் தேசிகர் மெய்கண்ட

சாத்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டி விசயங்களை அருமையாக எடுத்து

விளக்குவார். அத்தகைய காலங்களில் பொழுது போவதே தெரியாது. தமிழ்

விருந்தென்று உபசாரத்துக்குச் சொல்லுவது வழக்கம். அங்கே நான்

அனுபவித்தது உண்மையில் விருந்தினால் உண்டாகும் இன்பமாகவே இருந்தது.

உணவின் ஞாபகம் அங்கே வருவதற்கே இடமில்லை.

பாடம் கேட்கையில் ஒவ்வொரு பாடலையும் நான் மூன்று முறை

வாசிப்பேன். பொருள் சொல்லுவதற்கு முன் ஒரு முறை பாடல் முழுவதையும்

படிப்பேன். பொருள் சொல்லும்போது சிறு சிறு பகுதியாகப் பிரித்துப்

படிப்பேன். பொருள் சொல்லி முடிந்த பிறகு மீட்டும் ஒரு முறை பாடல்

முழுவதையும் படிப்பேன். இப் பழக்கத்தால் அப்பாடல் என்மனத்தில் நன்றாகப்

பதிந்தது. பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறை இது.

திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த அன்ன சத்திரத்தில் நான்

காலையிலும் பகலிலும் இரவிலும் ஆகாரம் உண்டு வந்தேன்.

ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பாடத்தினாலும் சுப்பிரமணிய தேசிகருடைய

சல்லாபத்தினாலும் அயலூர்களிலிருந்து வருபவர்களுடைய பழக்கத்தினாலும்

புதிய புதிய இன்பம் எனக்கு உண்டாயிற்று. தம்பிரான்கள் என்னிடம் அதிக

அன்போடு பழகுவாராயினர். எனக்கும் அவர்களுக்கும் பலவகையில்

வேற்றுமை இருப்பினும் எங்கள் ஆசிரியராகிய கற்பகத்தின் கீழ்க் கன்றாக

இருந்த நாங்கள் அனைவரும் மனமொத்துப் பழகினோம். அவர்களுள்ளும்

குமாரசாமித் தம்பிரான் என்பால் வைத்த அன்பு தனிப்பட்ட சிறப்புடையதாக

இருந்தது. எல்லோரும் தமிழின்பத்தாற் பிணைக்கப்பட்டு உறவாடி வந்தோம்.

எங்களோடு மாயூரத்திலிருந்து வந்த சவேரிநாத பிள்ளை

திருவாவடுதுறையில் ஒரு வாரம் வரையில் இருந்து ஆசிரியரிடம் உத்தரவு

பெற்று மாயூரத்துக்குச் சென்றார். மாயூரத்தில் முன்சீப் வேதநாயகம் பிள்ளை

அவருக்குப் பழக்கமுடையவராதலால் அங்கே அவருடன் இருந்தனர்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.